செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

சுய ஒழுக்கம்

வார இறுதி நாட்களில் சுயஒழுக்கம் என்பதே இருக்காது. குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விடும் வேலை இல்லை என்ற ஒரே ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சற்று தாமதமாக எழலாம் என்ற எண்ணம் எல்லாவற்றையும் புரட்டிப் போடும். காலை நடைப்பயிற்சியில் தளர்வு. மொட்டை மாடியிலே சென்று விடலாம்; இல்லையேல் மாலை நேரத்தில் சென்று கொள்ளலாம் என்று ஏகப்பட்ட வேறு வழிகளை தேடும் மனம்.


விடுமுறை நாட்களில் நமக்கு முன் குழந்தைகள் எழுந்து கொள்வார்கள். அப்படி ஒன்று இன்றும் நடக்க, உடனே பூங்காவிற்கு செல்லலாமா? என்று அவர் கேட்கவும் எல்லோரும் துள்ளி குதித்துக் கொண்டு கிளம்பி விட்டோம்.  சிறிது தளர்ந்து போன உடலும் மனமும் மீண்டும் துள்ளலோடு எழுந்து உற்சாகமாக பூங்காவிற்கு சென்று நடைப்பயிற்சியும் சென்றாகி விட்டது.


குழந்தைகளுக்கு விடுமுறை என்று காரணம் காட்டி இரவு வெகு நேரம் தொலைகாட்சி பார்ப்பது, பாட்டு கேட்பது, தாமதமாக உறங்குவது, காலையில் அதனால் இன்னும் சிறிது நேரம் படுக்கையிலேயே இருப்பது, காலை உணவில் ஆரம்பித்து நாள் முழுவதும் எல்லாமே தாமதமாக நடப்பது என்று இரண்டு நாட்களும் வேறு மாதிரியாக செல்லும்.


இதில் வெளியே செல்வது, சொந்த ஊருக்கு போவது, பூஜை, கோயில், கல்யாணம், விழாக்கள் என்று எல்லாவற்றையும் கூடவே சேர்த்துக் கொண்டு காரணம் தேடி செய்யும் வேலையில் நியாயம் கண்டு பிடித்து தனக்குத்தானே சமாதானம் சொல்வதும் எதிர் தரப்பில் யாராவது கேள்வி கேட்டாலும் இத்தனை இடையூறுகளில் எப்படி எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடியும்? என்று கூறி அவர்களையும் தளர செய்யும் அளவிற்கு மனம் திடமாக இருக்கும்.


ஆனால் அதையெல்லாம் தகர்த்தி எந்த தடைகள் வந்தாலும் சுய ஒழுக்கத்தையும் மன உறுதியையும் கைவிட கூடாது என்று கடந்த சில நாட்களாக முயற்சி செய்வதுண்டு. அதில் ஒரு வியூகமாக இதைக் கடைப்பிடிக்கலாம் என்ற யோசனையில் உருவானது தான் குழந்தைகளையும் பூங்காவிற்கு அழைத்து செல்வது.


இந்த முறை ஒரு புத்தகத்தையும் எடுத்துச் சென்று இயற்கை சூழலில் சிறிது நேரம் வாசிக்க நேர்ந்தது சிறப்பு. ஆனால் இவர்களுக்காக தயாராவது ஒரு பெரிய ஆயத்தம். தண்ணீர், சிற்றுண்டி, விளையாட்டு பொருட்கள், தொப்பி, இன்னும் சேர்த்துக் கொண்டே போகும் அளவுக்கு அவர்களின் தேவைகள் நீளும்.



சுய ஒழுக்கம் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேறி செல்ல முடியும். மனம் தளர்வடையும் போது அதை தயார் படுத்த நாம் என்னவாக விரும்புகிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்தாலே போதும் எழுந்து முயற்சியில் இறங்கி விடலாம். எந்த நேரத்திலும் காரணம் தேடி தன்னை நியாயப்படுத்தி ஒரு செயலை செய்யாமல் இருக்க ஆயத்தப் படுவதற்கு பதிலாக அதை செய்வதற்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து செய்து தன்னைத் தானே பாராட்டி கொண்டு அடுத்த வேலைக்கு கடந்து செல்வது சிறப்பு. 


திங்கள், 17 பிப்ரவரி, 2025

பரீட்சை

 



பரீட்சை எப்படி இருந்துச்சு பாப்பா..?


அம்மா... ரொம்ப கஷ்டம்மா.. 


ஏன்டா..? நல்லா தான படிச்சிட்டு போனீங்க.


அம்மா..  அதெல்லாம் நம்ம படிக்காதது. படிக்கவே தெரியாது இல்ல.. பெரிய பெரிய கேள்வியா இருந்துச்சு. படிக்கவே முடியல.


ஆமா... அதுக்கு தான் நல்லா படிக்க தெரிஞ்சுக்கணும். நிறைய படிச்சு பழகணும்ன்னு சொல்றது.


மேம் படிச்சு காமிக்கலயா.. ?


இல்லம்மா... வேற மேம் வந்தாங்க. எதுவும் படிக்கல. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாங்க. அவ்ளோதான்.


சரி,  நீ எல்லா கேள்விக்கும் பதில் குறிச்சியா இல்லையா ?


அதான் கேள்வியே படிக்க தெரிலயேம்மா.. எப்படி பதில் எழுதறது?

 

ஏன் பாப்பா.. ? அப்போ எல்லா கேள்விக்கும் பதில் எழுதலயா?

கேள்வி தெரிலனா என்ன? பதில் சின்னதாதான இருக்கும். அத படிச்சி பாத்து பதில் எதுவா இருக்கும்ன்னு போட்டு இருக்கலாம்-ல.. 


அம்மா..! என்னம்மா நீ.. !


கேள்வி தெரியாமா பதில் மட்டும் எப்படிம்மா எழுத முடியும். 

முதல்ல கேள்வி படிக்க தெரிஞ்சா தான பதில் எதுன்னு தெரியும்.


அவ்வ்வ்வ் ...!


அச்சோ... ! என் செல்லகுட்டி. எவ்ளோ அழகா சொல்லுது. ஆமான்டா செல்லம் கேள்வி தெரிஞ்சா தான் பதில் எழுத முடியும். நம்ம சீக்கிரமா இன்னும் நல்ல படிக்க கத்துக்கலாம். 


குழந்தைங்க கிட்ட குறுக்கு வழிய நம்மளே சொல்ற மாதிரி ஆயிடுச்ச்சேச்சேன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ஆனா அவங்களோட  அழகிய மனசு இருக்கே... !