சனி, 8 மார்ச், 2025

மார்கழி திங்கள்


காலை பணியில் எழுந்து மாட்டு சாணத்தில் நீர் தெளித்து கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமமிட்டு பூசணி பூவை நடுவில் வைத்து விளக்கேற்றும் காலம் இது.


இப்போதும் இதெல்லாம் எந்த காலமாயினும் நான் ஊருக்கு போனால் செய்வதுண்டு. விடிய விடிய அம்மா எழுவதற்கு முன்பு  எழுந்து நான் தான் கோலமிடுவேன் என்று அடம்பிடித்து தூங்கினாலும் எழுப்பி விட வேண்டும், நீங்கள் போடக் கூடாது என்று சொல்லி காலை நாலரை மணிக்கே எழுந்து சிறியதாக புள்ளி வைத்து ஆரம்பித்து பெரிதாக ஒரு சின்ன இடம் கூட விடாமல் எல்லா இடங்களையும் நிரப்பி விடுவேன்.


செஞ்சியில் இருக்கும் போது யார் வீட்டுக் கோலம் பெரிதாகவும் அழகாகவும் இருக்கிறது யார் வீட்டில் முதலில் கோலம் போட்டார்கள்?என்றெல்லாம் அந்த தெரு முழுக்க எங்களுக்குள் போட்டி இருக்கும். இன்னும் சொல்ல போனால் சில சமயம் அம்மா நீர் தெளித்து சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள். கோலம் போடுவதற்கு என்னை எழுப்புவார்கள்.


விசேஷம் என்றால் நான் மட்டும் தான் போடுவேன். கலர் கோலமாவு வாங்க அப்பா காசு கொடுக்க மாட்டார். அதெல்லாம் வீண் என்று சொல்லுவார். அரிசி மாவே போதும் என்பார். நான் தான் அடம் பிடித்து பாட்டியிடம் காசு வாங்கி  கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்து பொங்கலுக்கு மட்டுமாவது போடுவதற்காக வாங்குவேன்.


இன்றும் எங்கள் வீட்டுக்கு போனால் அம்மாவுக்கு கோலம் போட லீவு. பாட்டி பிள்ளையார் பிடித்து பூ வைத்து விடுவார். பெரிதாக என் இஷ்டத்திற்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ போட்டுக் கொண்டே போவேன்.




இது போல சிக்கு கோலங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் போடத் தெரியாது. பாட்டியிடம் கேட்டு ஒரு நோட்டு முழுக்க போட்டு வைத்து இருந்தேன். இதெல்லாம் என் ஞாபகத்தில் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தது.


அப்போதெல்லாம் புள்ளி வைக்காத ரங்கோலி கிடையாது. பெரிய பெரிய புள்ளி வைத்த பூக்கோலம் போடுவது பிரபலம். ஆனால் பெரிய தொழிலதிபர்கள் வீட்டு வாசலில் ரோஜா வரைந்து பார்த்தது தான் முதல் அனுபவம்.


யார் வீட்டில் எது வரைந்து இருந்தாலும் அப்படியே பார்த்துக் கொண்டு வந்து வீட்டில் மறுநாள் போட்டு பார்ப்பேன். என் பாட்டிக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும். அவர்கள் பாராட்டுவதற்காகவே இன்னும் இது போன்ற நிறைய நிகழ்வுகளை நடத்துவேன்.


மார்கழி பணியில் காலையில் குளிர்ந்த நீரில் குளித்து ஆண்டாள் போல பெருமாளை பார்க்க கோயிலுக்கு சென்ற நினைவுகளும் உண்டு. அலுவலகம் காலை ஆறு மணிக்கு. அதற்கு முன் எழுந்து அருகிலேயே இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று பஜனை மற்றும் பாராயணம் பாடுவதை கேட்க இனிமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். கூடவே சுடச் சுட வெண்பொங்கல் பிரசாதம் கொடுப்பது காலை பசிக்கு இதமாக இருக்கும். அந்த உணர்வை உணர்ந்து முடிப்பதற்குள் அலுவலக வண்டி வந்து விடும்.



என்னை பார்த்து, நான் ரசித்து செல்வதை பார்த்து என்னோடு இருந்த என் அக்காக்களும் தோழிகளும் இணைந்து கொள்வார்கள். எனக்கு அந்த பெருமாள் கோயில் ஐயர் பரிசளித்த திருப்பாவை புத்தகம் கிழிந்து போய் இருந்தாலும் இன்றும் பூஜை அறையில் பத்திரமாக இருக்கிறது. 



"எம்பாவாய்..." என்று ஒவ்வொரு பாடலையும் பாடி முடிக்கும் போது அந்த வர்ணனையை கேட்க அதில் உள்வாங்கி நாமே அந்த இடத்தில் பயணம் செல்வது போல அங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


மார்கழியில் ஒரு தெய்வீக உணர்வு உண்டு. அதன் மீது தீரா காதலும் உண்டு.